கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் இன்று (21.02) பிற்பகல் இடம்பெற்றது.
கார் ஒன்றில் வருகை தந்த சிலர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ‘டிலைட்’ என்று அழைக்கப்படும் 55 வயது மீன் வியாபாரி என்று கூறப்படுகிறது.
இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.







