ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கநெறி, பொறுப்புணர்வு மற்றும் விமர்சன ரீதியான சிந்தனையை ஊக்குவித்து, தேசிய ஊடகக் கலந்துரையாடல்களில் அவர்களைச் செயற்திறனுடன் பங்கெடுக்கச் செய்யும் நோக்கில், கொழும்பு ஆனந்தக் கல்லூரியின் குலரத்ன மண்டபத்தில் மார்ச் 14ஆம் திகதி நடைபெற்ற “சந்தேஷய” ஊடக விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு ஆனந்தக் கல்லூரியின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில், ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும்’, பாடசாலை மட்டத்திலான திறமையாளர்களுக்கு ஊடக விருதுகளும் பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டன.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,
தகவல் தொழில்நுட்பமும் ஊடகத்துறையும் மிக வேகமாக மாற்றமடைந்து வரும் ஒரு காலகட்டத்திலேயே நாம் வாழ்கிறோம். இந்த மாற்றங்கள் எமக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் அதேவேளை, பல சவால்களையும் எமக்கு முன்னால் நிறுத்தியுள்ளன. தகவல் தொழில்நுட்பத்தாலும் ஊடகங்களாலும் மாற்றமடைந்த ஒரு உலகில் வாழ்வதற்கு எமது எதிர்கால சந்ததியினரை நாம் தயார்படுத்த வேண்டும்.
இன்று ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்க்கும்போது, ஊடகங்களும் தகவல்களும் ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறலாம். கடந்த காலங்களில், அறிவு மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை ஒரு குறிப்பிட்ட சலுகை பெற்ற அல்லது அதிகாரம் கொண்ட குழுக்களிடமே இருந்தது. எத்தகைய தகவல்கள் பரிமாறப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி ஒரு சிறிய குழுவிடமே காணப்பட்டது. ஆனால், இன்று தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாகத் தரவுகளும் அறிவும் நம் அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாக மாறியுள்ளன. இது ஒரு வகையில் வரவேற்கத்தக்க விடயமாகும்.
இன்று நாம் வெறும் ஊடகப் பார்வையாளர்களோ அல்லது நுகர்வோரோ மட்டுமல்ல; பிரஜைகள் என்ற ரீதியில் இன்று ஒவ்வொருவரும் ஒரு ஊடகவியலாளராக மாற முடியும். தகவல்களைக் கையாளவும் பகிரவும் மக்களுக்கு இன்று பாரிய வாய்ப்புகள் உருவாகியிருப்பது ஒரு சிறந்த விடயமே என்ற போதிலும், அதில் ஒரு பாரிய ஆபத்தும் இருக்கவே செய்கின்றது. ஊடகவியலில் இருக்க வேண்டிய பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பில் இன்று பெரும் பிரச்சினைகளையும் பாரிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
உண்மை எதுவென்று கண்டறிய முடியாத அளவிற்குத் தகவல்கள் இன்று எம்மை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கின்றன. இதனால் சில நேரங்களில் முடிவுகளை எடுப்பது மிகவும் கடினமாகிறது. எமது நாட்டில் மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது, தவறான அல்லது திட்டமிட்டுச் சிதைக்கப்பட்ட தகவல்களினால் சமூக மோதல்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களை நாம் பார்த்திருக்கிறோம்; மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நிகழ்வுகளையும் கண்டிருக்கிறோம்.
எமது அறியாமையிலேயே சில சமயங்களில் நாம் இணையத்தளங்களின் மாய வலைக்குள் சிக்கிக்கொள்கிறோம். எமக்குத் தேவையானவை, தேவையற்றவை என அனைத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்கிறோம். ஆனால், இதன் மூலம் எமது தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் சேகரிக்கப்படுவதை நாம் மறந்துவிடுகிறோம். ஒரு தவறான விடயம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவிட்டால், அதனை மக்களின் நினைவிலிருந்து அகற்றுவது மிகக் கடினம்.







