மீண்டும் ஊர் திரும்பும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

36
0
Spread the love

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காகத் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், தற்போது மீண்டும் கொழும்பை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இதற்கமைய, பயணிகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஒரு முறையான திட்டத்தின் கீழ் இன்று (15) முதல் பேருந்து சேவைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த விசேட பேருந்து சேவைகள் வரும் 20ஆம் திகதி வரை தொடரும் என அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார். பயணிகளின் தேவை இருப்பின், 20ஆம் திகதிக்கு பின்னரும் வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பு மற்றும் பிரதான நகரங்களுக்கு மக்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாளை (16) முதல் நாடு முழுவதும் சுமார் 50 சதவீத தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பயணிகளின் வருகை தற்போது குறைவாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொலைதூரச் சேவைகள் உட்பட சுமார் 7,000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து சேவைகளும் முழுமையாக வழமைக்குத் திரும்பும் என்றும் கூறினார்.

ரயில் சேவைகள் குறித்து கருத்துத் தெரிவித்த ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க, நாளை (16) முதல் அலுவலக ரயில் சேவைகள் வழமை போல் இயங்கும் எனத் தெரிவித்தார்.

முக்கிய ரயில் சேவைகள் பற்றிய விபரங்கள்:

  • சாகரிகா ரயில்: நாளை (16) மற்றும் 17ஆம் திகதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு பெலியத்தவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும். மாலை வேளைகளில் கொழும்பு கோட்டையிலிருந்து வழக்கமான நேரத்தில் தனது பயணத்தை ஆரம்பிக்கும்.

  • ருஹுணு குமாரி மற்றும் காலு குமாரி: மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து வழக்கமான நேர அட்டவணைப்படி புறப்படும்.

அதேபோல் காலி ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.15, 4.00, 4.10, 5.00 மற்றும் 5.15 மணி என ஒவ்வொரு அரை மணித்தியாலத்திற்கு ஒருமுறை கொழும்பு கோட்டை நோக்கி ரயில்கள் இயக்கப்படும்.

மேலும், நாளை காலை முதல் மஹவ, கணேவத்த, குருணாகல், ரம்புக்கணை மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களிலிருந்தும், சிலாபத்திலிருந்து இரண்டு ரயில்களும், அவிசாவளையிலிருந்து மூன்று ரயில்களும், கொஸ்கமையிலிருந்து ஒரு ரயிலும் கொழும்பு நோக்கி இயக்கப்பட்டு, மாலை வேளைகளில் அலுவலக ரயில் சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்படும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here