பூஜித்தவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்கான திகதி நிர்ணயம்

68
0
Spread the love

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

குறித்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான போதிய புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமை மூலம் குற்றவியல் ரீதியாகக் கடமையை மீறியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சந்தேகநபர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (12) பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகளைக் கொண்ட கொழும்பு நிரந்தர மேல் நிதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வமான சமர்ப்பணங்கள் இரு தரப்பினராலும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளன.

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராயந்த நீதிபதிகள் குழாம், இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாகத் தெரிவித்தது.

இதேவேளை, இதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கும் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது, முறைப்பாட்டு தரப்பினர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா தமது சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரதிவாதியான ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் சட்டத்தரணி சமிந்த அத்துகோரள சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், அவரது மேலதிக சமர்ப்பணங்களை எதிர்வரும் திங்கட்கிழமை (15) வரை ஒத்திவைப்பதற்கும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here