அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மேலதிக விசாரணைகளுக்காகத் தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (1) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உயர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதேவேளை, தமக்கு எதிரான விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்குமாறும், தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை மாற்றுமாறும் கோரி சுரேஷ் சலே உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தார்.
இதன்போது அவரது ஆரோக்கிய நிலை நாளுக்கு நாள் மோசமடைந்ததுடன், கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி அவர் மாரடைப்பு நிலைமைக்கும் முகங்கொடுத்தார்.
அதன்படி, சுரேஷ் சலே சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது வரை இதய நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை, இன்று (01) சுரேஷ் சலே தனது சட்டத்தரணிகளின் ஆலோசனைக்கு அமைவாக, தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடவும் தீர்மானித்தார்.







