குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 652 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, நேற்று (01) 26,377 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போதே இந்த சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 129 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 53 பேரும், அலட்சியமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 129 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,249 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.







