மன்னாரில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நிகழ்த்தி வந்த நிலையில் அந்தத் திட்டம் சிறிது காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நேற்றைய தினம் (04.08) மக்கள் அமைதியான ஒரு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளான இன்றும் (05.08) மக்கள் அமைதி வழிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் கடை அடைப்பு செய்ததோடு மீனவர்கள் கடற் தொழிலுக்கு செல்லாமல் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பொது அமைப்புகளி ன் பிரதிநிதிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், ,மீனவ சமூகத்தின் பிரதிநிதிகள், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் காற்றாலை அமைக்கும் உபகரணங்களை மன்னார் தீவுக்குள் கொண்டு வருவதற்கென முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 06 வாகனங்களை தீவிற்குள் வரவிடாது தடுக்கும் முகமாக மன்னார் தள்ளாடி சந்தியில் பொதுமக்கள் தொடர்ந்தும் ஒன்று கூடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











