ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குழந்தை பருவ புற்றுநோயாளர்கள் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சூரஜ் பெரேரா தெரிவித்தார்.
முறையான மற்றும் சரியான நேரத்தில் வைத்திய சிகிச்சை பெறுவதன் மூலம் இந்த இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு வைத்தியர் சூரஜ் பெரேரா இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
இங்கு கருத்து தெரிவித்த அவர்,
“2022 ஆம் ஆண்டில், 904 குழந்தை புற்றுநோயாளர்கள் கண்டறியப்பட்டனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கான தரவுகளை ஆராய்ந்தால், குழந்தை புற்றுநோய்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்பது தெளிவாகிறது.
சராசரியாக, ஆண்டுக்கு 600 முதல் 800 வரை இருந்த நோயாளர்களின் எண்ணிக்கை, தற்போது 900 ஆக உயர்ந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தரவுகளின்படி, குழந்தை புற்றுநோய் காரணமாக சுமார் 200 இறப்புகள் பதிவாகின. 2020 முதல், ஆண்டுக்கு சுமார் 200 குழந்தை புற்றுநோயாளர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தும், தாமதமாகக் கண்டறியப்படும் நோயாளர்கள் உள்ளனர். சரியான நேரத்தில் வைத்திய சிகிச்சை பெறுவதன் மூலம் இந்த இறப்புகளை மேலும் குறைக்க முடியும்.” என்றார்.







