இந்திய நிதியுதவியில் வடக்கு ரயில் மார்க்கத்தின் முதற்கட்ட புனரமைப்பு பணிகள் இன்று(11.01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் வடக்கு ரயில் மார்க்த்தின் பாதை பாரியளவில் சேதமடைந்திருந்தது.
எதிர்வரும் 19ஆம் திகதி முதல் வடக்கு ரயில் மார்க்கத்தின் மஹவ முதல் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இந்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்காக 05 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.







