தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக நாடு முழுவதும் 20 நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி நெல்லியடி நகரமும் மானிப்பாய் நகரமும் விரைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரமும் இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்த நகர அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்வாதார நிலை உயர்வதுடன், வர்த்தக, போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
படிப்படியாக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நகர அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் சமநிலையான பிராந்திய அபிவிருத்தியை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்” என்றார்.







