சொத்து விபரங்களை சமர்ப்பிக்க புதிய இலத்திரனியல் கட்டமைப்பு

61
0
Spread the love

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கான மத்திய இலத்திரனியல் கட்டமைப்பை பிரகடனப்படுத்துபவர்களுக்காகத் திறந்து வைக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள சர்வதேச ஆய்வு மைய கேட்போர் கூடத்தில் இந்த இலத்திரனியல் கட்டமைப்பு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவது ஒரு முதன்மையான தேவையாகக் கருதப்படுகிறது.

இதுவரை காலமும் இந்த விபரங்கள் அச்சிடப்பட்ட படிவங்களை கைகளால் பூர்த்தி செய்வதன் மூலமே சமர்ப்பிக்கப்பட்டு வந்தன

இந்த மத்திய இலத்திரனியல் கட்டமைப்பை உருவாக்குவது என்பது வெறும் படிவத்தை இணைய வழியில் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், சொத்து விபரங்களை வெளிப்படுத்தும் ஒட்டுமொத்த செயல்முறையையும் முழுமையான டிஜிட்டல் மயமாக்கலுக்கு உட்படுத்துவதாகும்.

தவறான முறையில் சொத்து விபரங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் அசாதாரணமான முறையில் சொத்துக்களைச் சேர்த்துள்ள நிலைகளைக் கண்டறிவதற்கான சரிபார்ப்பு வசதிகளுடன் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பலமான சட்டக் கட்டமைப்பை நடைமுறை ரீதியாக வலுப்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான தொழில்நுட்பத் தேவையாக இது அமையும்.

இந்த இலத்திரனியல் கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாட்டின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் நவீனமயமாக்கல், சுதந்திரமான செயற்பாடு மற்றும் வினைத்திறன் ஆகியவை இணைக்கப்படும் என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here