ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென அனைத்து தரப்புகளுக்கும் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகம் முழுவதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பெரிய போர் நிலைக்கு மத்திய கிழக்கு நகர்ந்து வருவதாக எச்சரித்தார்.
எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை பாதிக்கப்படுவது உலகின் ஏழை மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அனைத்து தரப்பினரும் உடனடி போர் நிறுத்தத்தை மேற்கொண்டு, பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்றும், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உட்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்த மோதலை நிறுத்த வேண்டும் என்றும், ஈரான் அண்டை நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.






