அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

38
0
Spread the love

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

பயிற்சிக்கு பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் சுகாதார அமைச்சு தமக்கு வழங்கிய உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றது.

குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

எனினும், வெளியிடப்பட்டுள்ள நியமனப் பட்டியலை உடனடியாக நீக்கி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நியமனங்கள் தொடர்பில் குறித்த சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதை சுகாதார அமைச்சர் இதுவரை நிராகரித்து வருகிறார்.

வைத்தியர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று ஒரு சந்திப்பிற்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும், பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டதால் குறித்த பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடனும் இன்று கலந்துரையாடி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here