உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை சீர்குலைக்க முயற்சி

9
0
Spread the love

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், சில அரச அதிகாரிகள் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிமித்தம் இன்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் உள்ளனவா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்த கர்தினால் ஆண்டகை, அவ்வாறு இல்லையெனில் உண்மையைத் தேடும் பயணத்திற்கு ஏன் இவ்வளவு தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கூட ஆழமாக ஆராய முடியாமல் போன சில விடயங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ‘அபு ஹிந்த்’ என்பவர் யார் என்பதைக் கண்டறிவது முக்கியம் என்றும் கூறினார்.

சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் அந்த நபர் பற்றிய தகவல்களைத் தேடுவது மிகவும் அவசியமானது என்றும், அபு ஹிந்தின் அடையாளம் குறித்து சி.ஐ.டி விசாரணை நடத்துவதாக ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தனவின் அலைபேசி மற்றும் கணினியில் இருந்த அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக சாட்சியங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நிலாந்த ஜயவர்தன வேண்டுமென்றே தாக்குதல் குறித்த உண்மைத் தகவல்களை மறைத்தாரா? அப்படியென்றால் அவர் ஏன் அவ்வாறு செய்தார்? என்றும் கர்தினால் ஆண்டகை இதன்போது கேள்வி எழுப்பினார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய தினத்தில் இந்நாட்டின் வரலாற்றில் கருப்பு தினமொன்று உதயமானது. அந்த வருடத்தின் உயிர்த்த ஞாயிறு தினமான அன்று, மதத் தீவிரவாதத்தைக் கையில் எடுத்த பயங்கரவாதிகள் குழுவொன்று 03 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பிரதான சுற்றுலா ஹோட்டல்கள் உட்பட 08 இடங்களில் நடத்திய 10 தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 275 பேர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதல் தொடர்பில் பல விசாரணைகள் இடம்பெற்ற போதிலும், பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க திருச்சபை அவற்றில் திருப்தியடையவில்லை. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில், பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, வத்திக்கானின் தூதுவர் அந்துரேயாஸ் இயோஸ்வோவிச் ஆண்டகை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. வணக்கத்திற்குரிய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் மற்றும் ஏனைய மதப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முதலாவது குண்டு வெடித்த காலை 8.45 மணிக்கு ஆலய மணி ஒலிக்கப்பட்டு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விசேட ஆராதனைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here