வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வேறு ஒரு தரப்பினரின் கைக்குச் சென்ற சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி
ஹர்ஷண சூரியப்பெருமவை அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (05.05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு
பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.
இது குறித்து நிதியமைச்சிற்கு தகவல் கிடைத்தவுடன், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,
அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கணினி அவசர காலப் பிரதிப்பலிப்புப் பிரிவு ஆகியவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதும்
அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன்தான் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் உள்வாரியான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், நான்கு அமைச்சின் அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதற்கும்
நிதியமைச்சின் செயலாளரே அனுமதி வழங்கியுள்ளார் என்றும், அவரின் அனுமதியின்றி எவ்வித முறைப்பாடுகளும் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிதியமைச்சினால் கண்டறியப்பட்ட ஒரு செயல்முறை தொடர்பான சம்பவம் குறித்து அந்த அமைச்சினாலேயே விசாரணைகள் நடத்தப்படுவதாகவும்,
நிபுணத்துவம் வாய்ந்த விசாரணை அமைப்புகளிடம் அமைச்சினாலேயே முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் என வெளியாகும் செய்திகள் குறித்து
கருத்துத் தெரிவித்த அமைச்சர், அவர் பதவியில் இருக்கும் எந்த நேரத்திலும் இரட்டைப் பிரஜையாக இருக்கவில்லை என்று கூறினார்.
“அவர் பாராளுமன்றத்தில் இருந்தபோதோ, பிரதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்திலோ அல்லது நிதியமைச்சின் செயலாளராகப் பணியாற்றும்
போதோ இரட்டைப் பிரஜையாக இருந்தால், நீங்கள் அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்லலாம். எனவே, அவர் இரட்டைப் பிரஜை அல்ல. அவர் பதவிகளை
வகித்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரட்டைப் பிரஜையாக இருக்கவில்லை என்பதை நான் மிகுந்த பொறுப்புடன் கூறுகிறேன்,” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.






