மன்னாரில் படையினர் வசம் உள்ள பொதுமக்களுடைய காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பெயரில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் இன்றைய தினம் (25.05)திங்கட்கிழமை மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
அதற்கு அமைய முள்ளிக்குளம் சிலாபத்துறை ,,பள்ளி முனை வங்காலைப்பாடு,தலைமன்னார் போன்ற மக்கள் காணிகளில் காணப்படும் ராணுவ மற்றும் கடற்படை முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு
அருகில் இருக்கும் பொது மக்களின் கருத்துக்களையும் கேட்டு அறிந்தனர்,
அதன் பின்னர் மன்னார் மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2 மணி அளவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்’
இன்று நாங்கள் மன்னாரில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள படை முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு
அது தொடர்பில் அங்குள்ள மக்களிடமும் கலந்துரையாடலை மேற்கொண்டோம். அந்த வகையில் இன்று சேகரித்த தரவுகளை நாங்கள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்று கலந்துரையாடி ஒரு சுமுகமான தீர்வினை எட்டுவோம் .
மன்னாரைப் பொறுத்தவரையில் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் கடற்படை முகாம்கள் தான் அதிகமாக காணப்படுகின்றன அப்பகுதியில் போதைப் பொருள் கடத்தல் போன்ற விடயங்கள் அதிகமாக நடைபெறுவதனால் மக்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் அப்பகுதியில் இருக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு ஒரு நல்ல தீர்வினை எட்டுவோம் என தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலிலே , மேலதிக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அபிவிருத்தி கூட்டுறவு பிரதி அமைச்சர் கடற்படை தளபதி ,இராணுவ தளபதி , வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள்,மன்னார் மாவட்ட செயலாளர் மற்றும் அனைத்து அரச அதிகாரிகள் , முப்படை பிரதானிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .







