கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தற்போது (30) அழைத்துவரப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
அந்த வழக்கு விசாரணை தொடர்பிலேயே அவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்த மனிதக் கொலைகள் குறித்து நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னரே குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இந்த அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளின்படி, இந்த சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ள கொலைச் சம்பவங்கள் வருமாறு:
2008 ஜனவரி 09ஆம் திகதி மட்டக்களப்பு, கல்லடிப் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் T-56 துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை.
2008 மே 22ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் வைத்து இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை.
2008 ஆகஸ்ட் 20ஆம் திகதி வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தியாபொல, கண்ணன்குடா பகுதியில் இரவு வேளையில் ஆயுதமேந்திய குழுவினரால் மேலும் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை.
இந்தக் குற்றங்களுடன் தொடர்புடைய தலா மூன்று சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதன்படி, முதலாவது சந்தேகநபர் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே இந்நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாட்டில் வசித்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஏனைய இரு சந்தேகநபர்களும் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு, கடந்த 2025 ஆகஸ்ட் 13 மற்றும் நவம்பர் 13ஆம் திகதி முதல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களாவர்.
இந்த ஐந்து மனிதக் கொலைச் சம்பவங்களினதும் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார்.
இவர் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.







