திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன வழங்கிய விளக்கங்களின் அடிப்படையில் தற்போதைய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிக்கை நிதிக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் மத்திய வங்கி மற்றும் திறைசேரியுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அவர்கள் இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்தனர். மத்திய வங்கி தனது அறிக்கையை தனியாக சமர்ப்பித்தது. ஏனெனில் திறைசேரியினால் வழங்கப்பட்ட பல விடயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, நாங்கள் அதனை பகுப்பாய்வு செய்தோம்.
நாங்கள் ஒரு வரைவைத் தயாரித்து, அதை குழு உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளோம். அந்த வரைவை வாசித்து அவர்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கூறியுள்ளோம். அந்த கருத்துக்கள் பெறப்பட்டதும் வரும் செவ்வாய்க்கிழமை அறிக்கையை இறுதி செய்ய எதிர்பார்க்கிறோம்.
அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளோம். நான் தலைவராக இருப்பதால் எனக்கு தேவையானவாறு அதனை சமர்ப்பிக்க முடியாது, அனைவரினதும் கருத்துக்களைப் பெற்று, பகுப்பாய்வு செய்து, ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்த பின்னரே நாங்கள் அறிக்கையை சமர்ப்பிப்போம்.” என்றார்.







