கொழும்பு மாவட்ட பிரதேச செயலகங்களில் இன்று முதல் ஆரம்பமான புதிய வசதி

29
0
Spread the love

கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் அரச சேவைகளுக்காகவும் கடனட்டை (Credit) மற்றும் வரவட்டை (Debit) மூலம் பணம் செலுத்துவதற்கான புதிய வசதி இன்று (02) முதல் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

“டிஜிட்டல் மயமாக்கல்” ஊடாக அரச சேவைகளை மேலும் திறமையானதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், மக்கள் நலன்சார்ந்ததாகவும் மாற்றுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணையாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண விழா இன்று திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவு மற்றும் வாகன வருமான உத்தரவு பத்திர பிரிவிற்காக நிறுவப்பட்ட POS இயந்திரங்கள் திறந்துவைக்கப்பட்டதுடன், பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் வாகன வருமான வரிப்பத்திரங்கள் அடையாள ரீதியாக விநியோகிக்கப்பட்டன.

கொழும்பு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலின் கீழ், அரச வங்கி ஒன்றின் நிதி மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், கொழும்பு மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள் கடனட்டை மற்றும் வரவட்டையை பயன்படுத்தி பாதுகாப்பாக பணம் செலுத்த முடியும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வேகமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் உலகிற்கு ஏற்ப, இலங்கையின் அரச துறையை நவீனமயமாக்குவது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.

இந்த புதிய முறையின் மூலம் பொதுமக்கள் பணம் கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லாதொழிவதுடன், குறுகிய காலத்திற்குள் திறமையான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், கொடுக்கல் வாங்கல்கள் மிகவும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பண மோசடிகள் மற்றும் பணம் காணாமல் போகும் அபாயத்தைக் குறைத்தல், அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் முறையாகப் பதிவு செய்தல் மற்றும் கணக்காய்வை எளிதாக்குதல் ஆகியவற்றுடன், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த வேலைத்திட்டம் பங்களிக்கும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here