நானாட்டான் பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அன்ரன் அன்ட்ரூ தெரிவு செய்யப்பட்டார்.
நானாட்டான் பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் (25.06) புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நானாட்டான் பிரதேச சபையில் நடைபெற்றது.
இதன் போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அன்ரன் அன்ட்ரூ ராஜன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஜெறோம் இருதயதாஸ் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டன.
சபையில் உள்ள 17 உறுப்பினர்களில் சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவர் வெளிநடப்புச் செய்தார்.
ஏனைய 16 உறுப்பினர்களும் கலந்து கொண்டு பகிரங்க வாக்கெடுப்பைக் கோரியிருந்தனர்.
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஜெறோம் இருதய தாஸ் 06 வாக்குகளையும்,தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அன்ரன் அன்ட்ரூ ராஜன் 10 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
அன்ரன் அன்ட்ரூவிற்க்கு ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு,தொழிலாளர் கட்சி,சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவர், ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் ஆதரவை வழங்கி இருந்தனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஞானராஜ் சோசை போட்டியின்றி உப தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








