ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28.07) முற்பகல் மாலைதீவின் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதையுடன் ஜனாதிபதியை அந்நாட்டு ஜனாதிபதி கலாநிதி
மொஹமட் முய்சு வரவேற்றார்.
ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக மாலைதீவு வெலானா சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் வருகை முனையத்தில் சிறுமிகள் குழுவொன்று கலாசார நடனத்தை நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி அந்த சிறுமிகளுடன் உரையாடலிலும் ஈடுபட்டார்.
மேலும் ஜனாதிபதி வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு தலைமையில் மாலைதீவின் தலைநகரான மாலேயில் உள்ள குடியரசு சதுக்கத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த அரச விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.







