10 வருடங்களுக்குப் பிறகு தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு ஆரம்பம்

49
0
Spread the love

தேசிய மீன்பிடிப் படகு கணக்கெடுப்பு இன்று (4.08) ஆரம்பமாகவுள்ளது.

இதன் முதல் கட்டம் இன்று பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பமாகி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மீன்பிடி படகு கணக்கெடுப்பு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

நாட்டின் கடற்கரையோரத்தில் இயங்கும் சுமார் 50,000 மீன்பிடி படகுகளில் புதுப்பிக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குவதே இந்தக் கணக்கெடுப்பின் பிரதான நோக்கமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம், தொழிலில் தீவிரமாக ஈடுபடும் படகுகளை அடையாளம் காண்பது, பாவனையில் இல்லாத மற்றும் பழுதடைந்த படகுகளை கரையோரத்திலிருந்து அகற்றி “Clean Sri Lanka” திட்டத்திற்கு ஆதரவளிப்பது, சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்குப் பங்களிப்பது மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கான உரிமங்களை ஒழுங்குபடுத்துவது போன்றவை எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த கணக்கெடுப்பு பல கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டத்தில், வெளி இணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட OFRP மற்றும் MTRB படகுகளும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் அனைத்து பல நாள் மற்றும் இயந்திரமற்ற படகுகளும் கணக்கெடுக்கப்படும்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் ஒவ்வொரு மீன்பிடித் இறங்குதுறைகளுக்கும் விஜயம் செய்து, படகுகளைப் பரிசோதித்து பிரத்தியேக கணக்கெடுப்பு ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டுவார்கள்.

கணக்கெடுப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மீன்பிடி படகு அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய அனைத்து நிவாரண சேவைகளும் அடுத்த வருடம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாட்டில் மீன்பிடி படகுகளின் புதுப்பிக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றும், கணக்கெடுப்புக்கு சமர்ப்பிக்காத படகுகளின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here