பொரளை – வனாத்தமுல்லவில் இலங்கை பொலிஸ் திணைக்களம் புதிய பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த பகுதியில் அண்மைக்காலமாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், பல்வேறு குற்றச் செயல்களும் பதிவாகியுள்ளதுடன் மேலும் போதைப்பொருள்
கடத்தல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்கான பகுதி ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட வனத்தமுல்லவில்,
சஹஸ்புர உட்பட பல தொடர்மாடி குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
பொரளையில் துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அருகில் ஒரு பொலிஸ் சோதனைச் சாவடி செயல்பட்டு வந்ததாகவும்,
வனாதமுல்லவில் உள்ள சிறிசர உயன வீட்டு வளாகத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், பொலிஸ் சிறப்பு வாகன படை அதிகாரிகளையும் பொலிஸ் சோதனைச் சாவடியையும் கடந்து சென்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களுக்கமைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சென்ற பகுதியை பொலிஸாரால் அடையாளம் காணமுடிந்தது.
இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் இன்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்தால் மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







