யாழ். செம்மணி மனிதப் புதை குழியில் கால்கள் மடிக் கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதை குழியில் அகழ்வுப் பணிகளின் போது நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என் புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றைச் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (06.09) முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, அவற்றுள் 227 என்று இலக்கமிடப்பட்ட என்புக் கூட்டுத் தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் மீட்கப்பட்டது.
இது தொடர்பில் தெளிவான விளக்கத்தைப் பெற யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை மூத்த விரிவுரையாளர் ரமணராஜா புதைகுழிப் பகுதிக்கு அழைக்கப்பட்டு, அது தொடர்பான அவரது அவதானிப்புகள், விளக்கங்கள் கோரப்பட்டன.
அவர் தனது அவதானிப்பின்படி, மனித என்புத் தொகுதி இந்து முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், என்புக்கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்ட என்புக்கூடு இல்லை எனவும் தெரிவித்தார்.
அதையடுத்து அது தொடர்பான விபரமான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ். மேலதிக நீதிவான் செ.லெனின்குமார் உத்தரவிட்டார்.
இதேவேளை, செம்மணி மனிதப் புதை குழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் இன்று சனிக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், அடுத்த வழக்கு விசா ரணைகள் தொடர்பில் இன்று நீதிவான் திகதியிடுவார் என்று சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.







