ஐ.நா. ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். மேலும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கை நேரப்படி நேற்று இரவு (26.09) இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உரையாற்றுகையில் அரங்கத்தில் இருந்த பல பிரதிநிதிகள் எழுந்து வெளியேறினர்.
பலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றமும் சுமத்தினர்.
எவ்வாறாயினும் நெதன்யாகு தொடர்ந்தும் உரையாற்றினார்,
“பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம். பிணைக்கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது. ஹமாஸை அழிக்கும் வரை காசாவில் போர் தொடரும். காசாவில் பஞ்சத்திற்கு ஹமாஸ் உணவை திருடுவதே காரணம்.
உலகின் பெரும்பகுதியினர் அக்டோபர் 07ஆம் திகதியை நினைவு கொள்வதில்லை. ஆனால் நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதைவிட, தீமையை ஏற்றுக் கொள்கின்றனர். பொது வெளியில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் பல தலைவர்கள், இரகசியமாக நன்றி தெரிவிக்கின்றனர்.
பலஸ்தீனத்தை ஆதரிக்கும் சில நாடுகளின் முடிவு, அப்பாவி யூத மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும். எங்களுடைய தொண்டையில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்க அனுமதிக்கமாட்டோம்” என்றார்.







