மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது என வட மாகாண கடற்றொழிலாளர் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றையதினம் (04.10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சீன கடலட்டை பண்ணை சூழலுக்கு பாதிப்பா இல்லையா என்று ஒரு ஆய்வை செய்து தருமாறு நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழகத்திடம் கடந்த இரண்டு வருடங்களாக கோரிக்கை முன்வைத்தோம். ஆனால் அவர்கள் அந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
நாங்கள் பாரம்பரிய கடற்றொழிலாளர்கள். எங்களுக்கு எங்களது கடல் மீதும் எங்களது சுற்றுச்சூழல் மீதும் உள்ள அக்கறை காரணமாகவே இந்த ஆய்வினை மேற்கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.
ஆனால் கடந்த மாதம் கடற்றொழில்சார் திணைக்களங்களும் அதன் அதிகாரிகளும் கடல் அட்டையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு கலந்துரையாடலை யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கடல் வளங்கள் அழிகின்றது என நாங்கள் கூறும் போதும் மௌனம் காத்த யாழ். பல்கலைக்கழகம் இப்போது
அந்த கடல் அட்டையை காப்பாற்ற வேண்டும் என்று கூட்டம் போடுகிறது.
இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து வடக்கு கடற்றொழிலாளர்களை அழிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முயற்சிக்கிறதா என நாங்கள் பல்கலைக்கழகத்தை பார்த்து கேட்கின்றோம்.
இந்தக் கூட்டத்திற்கு, பாதிக்கப்பட்ட சிறு மீனவர்களையும், பாதிக்கப்பட்ட எவரையும் அழைக்கவில்லை.
வடக்கு கிழக்கு மாகாணத்திலே 62 சதவீதத்திற்கு மேற்பட்ட கடற்பரப்பு தமிழர்களின் கைகளில் இருக்கின்றது.
தமிழர்களுடைய கையில் இருக்கின்ற கடற்பரப்பையும் கடற்றொழிலாளர்களையும் அழிக்கின்ற, அரசாங்கங்களின் கீழ்
பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடமும் செயப்படுகின்றதா என்று கேள்வியும் ஐயமும் எமக்கு எழுகின்றது.
எதிர்கால சந்ததிக்காக இந்த கடலை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பு குறித்தும் நீங்கள்
கரிசனை கொள்ள வேண்டும்.
எதையும் அழிப்பதற்காக நாங்கள் எதிர்த்து கருத்துக்கு கூறவில்லை. எங்களுடைய சூழலும் வளமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது.
பதவியில் இருப்பவர்கள் தங்களது கதிரைகளை காப்பாற்றுவதற்காக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் என்று சொல்லிக்கொண்டு அரசாங்கத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பித்து, அந்த அறிக்கையினூடாக கடற்றொழிலாளர்களுடைய கருவை
அழிக்கின்றீர்கள் என்பது எமது குற்றச்சாட்டாக இருக்கின்றது” என்றார்.
யாழ்ப்பாண செய்தியாளர்
பூ.லின்ரன்







