சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10.12) வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகளுக்கு தங்கள் நிலை குறித்து கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தேடி 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருவதாகவும்,
இந்தப் போராட்டம் நீதியோ அல்லது உரிய பதில்களோ இல்லாமல் தொடர்வதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1948 இல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த நாள் முதல், தமிழர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு,
ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் மிகவும் கொடூரமான இனப்படுகொலை இடம்பெற்றதாகவும்
சரணடைந்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற பொய்யான வாக்குறுதியை நம்பி சரணடைந்த 29
குழந்தைகள் உட்பட குடும்பமாகச் சரணடைந்தவர்களும் உறவுகளால் கையளிக்கப்பட்டவர்களும் காணாமல்
ஆக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







