மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

167
0
Spread the love

கடந்த சில நாட்களாகப் பெய்த மழை மற்றும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சியுடன் எதிர்காலத்தில் பெய்யக்கூடிய மழையையும் கருத்தில் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, 3 ஆம் கட்டத்தின் கீழ் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி சுமிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்புர, மினிப்பே மற்றும் மெததும்புர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் மத்துரட்ட, நில்தண்டாஹின்ன, ஹங்குரன்கெத்த மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த அறிவிப்பு அமுலில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த முப்பத்தைந்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகப் பெய்த மழையினால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பரிசோதனைக்காகக் கிடைத்துள்ள கோரிக்கைகளின் எண்ணிக்கை 5,450 ஆகும் எனவும் சுமிந்த ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

அந்தக் கோரிக்கைகளில் அடங்கும் இடங்களின் எண்ணிக்கை 10,884 ஆக உள்ளதுடன், அவற்றில் 1,433 இடங்களுக்கான பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய மாகாணத்திற்குள் பரிசோதனைக்காகக் கோரப்பட்டிருந்த பாடசாலைகளின் எண்ணிக்கை 128 ஆக இருந்ததுடன், அவற்றில் 120 பாடசாலைகளின் பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here