இலங்கையின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வவுனியாவைச் சேர்ந்த, மாற்றுத் திறனாளியான மகின் மொஹம்மது அலி, நாடளாவிய ரீதியிலான சக்கர நாற்காலி பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
குறித்த சக்கர நாற்காலி பயணமானது இன்று (20.01)செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் நகரப் பகுதியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு அருகாமையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இன, மத பேதமின்றி இலங்கை மக்களிடையே ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கிலும்
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளையும் வலியுறுத்தும் நோக்கிலும், பேரிடர் காலங்களில் இலங்கைக்கு உதவிய நாடுகள் மற்றும் புலம்பெயர் சமூகங்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் முகமாகவும், குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
1500 கிலோமீட்டருக்கும் அதிகமான கடற்கரைப் பாதைகளை உள்ளடக்கிய இந்த பயணத்தினை மன்னாரிலிருந்து ஆரம்பிப்பது தொடர்பில் நேற்றைய தினம் (19.01) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனுடன் மகின் மொஹம்மது அலி, கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







