கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை அரசியல்மயமாக்க வேண்டாம் என வட மாகாண மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அகில இலங்கை மீனவ சங்கத்தின் இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
கச்சத்தீவு வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக கச்சத்தீவு வரும் இந்திய மீனவர்கள், அங்கு இலங்கை – இந்திய மீனவ விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் அதனை யாத்திரைத் தளமாக மாத்திரம் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய சட்ட சபைத் தேர்தல் அண்மையில் வரவுள்ளதால் நீண்ட காலமாக நிலவி வரும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையும் தேர்தலின் பேசுபொருளாக மாறியுள்ளது.
எனவே அதனடிப்படையில் இங்கு நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசாங்கம் மற்றும் மீனவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.







