இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 54-வது காலாட் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபேகோனின் வழிகாட்டலின் கீழ், 542-வது காலாட் படைப்பிரிவின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட 4-வது கஜபா காலாட் ரெஜிமென்ட் சார்பில் மருத்துவ முகாம் ஒன்று மன்/கட்டியடம்பன் ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த (03.02) நடைபெற்றது.
காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற்ற இம்மருத்துவ முகாம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மடு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், மன்/கட்டயடம்பன் ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் மன்/மடு சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 235 மாணவர்களுக்கு பற் சுகாதார விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், 16 ஆசிரியர்களின் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு, அபாய நிலையில் இருந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனை கிளினிக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பல் மருத்துவ சேவைகள் மன்னார் பிராந்திய சுகாதார சேவை அலுவலகத்தினாலும், பொதுவான மருத்துவ சேவைகள் பண்டிவிரிச்சான் பிராந்திய மருத்துவமனையினாலும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சித்திட்டமானது 542-வது காலாட் படைப்பிரிவின் பிரிகேடியர் ஏ.ஆர்.டபிள்யூ.சி. அசுரசிங்கவின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ், 4-வது கஜபா காலாட் ரெஜிமென்டின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்னல் எம்.எஸ்.எஸ். பிரணாந்து உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
நிகழ்வின் ஒருங்கிணைப்பு பணிகளை 542-வது காலாட் படைப்பிரிவின் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்னல் டபிள்யூ.ஏ.என்.டி. ஜயசுந்தர மேற்கொண்டார்.







