கடந்த வருடத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் பம்பிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (06.02) வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
யு என் டி பி நிறுவனத்தின் (UNDP)நிதி உதவியுடன் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் விவசாயத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட 25 விவசாயிகளுக்கு தலா 140,000 பெறுமதியான தண்ணீர் பம்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,
‘நாட்டில் நிலவுகின்ற நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு எமது பொருளாதாரம் மேம்பட வேண்டும் தனியே அரச நிறுவனங்களை அல்லது சேவை வழங்கும் நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதல்லாமல், எங்களுடைய நாடு ஒரு விவசாய நாடு என்ற வகையில் விவசாசாயத் துறையை மேம்படுத்த வேண்டும்.
நாட்டில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எங்களால் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. அவ்வாறில்லாமல் உற்பத்தி துறையை நாம் மேம்படுத்த வேண்டும் அதனால்தான் நம்முடைய நாட்டின் பொருளாதாரத்தை எட்ட முடியும்
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பெருநிலப் பரப்பில் மாத்திரமில்லாமல் தீவுக்குள்ளும் தற்போது விவசாயிகள் பயிற் செய்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு UNDP மற்றும் MARR போன்ற நிறுவனங்கள் உதவிகளை வழங்கி வருகிறார்கள் அந்த வகையில் இந்த தண்ணீர் பம்புகள் UNDP நிறுவனத்தினால் உங்களுக்கு வழங்கப்படுகின்றன இதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி பயிற்செய்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் .
குறித்த நிகழ்வில் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எம் பிரதீப், திட்டமிடற் பணிப்பாளர் எச்.ஹலிம்தீன், மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின்(MARR) தலைவர் அருட்பணி ரி. நவரட்ணம் செயலாளர் ராதா பெனான்டோ, UNDP, MARR நிறுவனங்களின் திட்ட உத்தியோகத்தர் சிங்ளேயர் பீற்றர், வெளிக்கள உத்தியோகத்தர் ராஜ் குரூஸ்,
UNDP வெளிக்கள உத்தியோகத்தர் ஜெயவதனி, மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பம்பிகளை வழங்கி வைத்தனர்.







