மன்னாரில் முக்கியமான மூன்று பிரதான வீதிகளை காப்பெற் விதிகளாக அமைப்பதற்காக அரசாங்கம் 219 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கி உள்ளது.
இந்நிலையில் அதற்கான வேலைத் திட்டங்கள் நேற்றைய தினம் (24.02) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட ‘எருவிட்டான்’ வீதி,மன்னார் நகர சபைக்குட்பட்ட ‘தரவன்கோட்டை வீதி’மற்றும் மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பேசாலை அவிதப்பர் வீதி ஆகிய மூன்று வீதிகளுமே இவ்வாறு காப்பெற் வீதிகளாக மாற்றப்பட உள்ளது.
நேற்றைய தினம் இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்,
‘குறித்த மூன்று வீதிகளும் கொத்தணி அடிப்படையிலே முழுமையாக காப்பற் போடப்பட உள்ளது.இதற்காக ஒப்பந்தக்காரர்களுக்கு 146 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக கிட்டத்தட்ட 73 மில்லியன் ரூபாய் மீதப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாங்கள் கணக்கிட்டதை விட மிகக் குறைந்த தொகையில் இந்த வேலைகளை முழுமையாக செய்து முடிக்க உள்ளோம்.இதிலே மீதப்படுகின்ற நிதியினைக் கொண்டு நாங்கள் ஏனைய வீதிகளையும் புனரமைக்க உள்ளோம். இந்த நிதியானது கடந்த வருடத்தில் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஆகும். இதிலே அதிகூடியளவான நிதி மன்னார் மாவட்ட வீதி புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்துக்கென கிட்டத்தட்ட 2200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.அதைவிட டிட்வா புயலின் பின்னர் பல அழிவுகளையும் சந்தித்து இருக்கிறது.அதற்கும் நாங்கள் வேறாக நிதி ஒதுக்கி இருக்கின்றோம். அதைவிட 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும் மன்னாருக்கு என்று கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதைவிட மன்னார் மாவட்டத்திலே இனங்காணப்பட்டுள்ள சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்வதற்காக 2027 ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஒரு சுற்றுலா வலயத்தினை இந்த மன்னார் மாவட்டத்தில் உருவாக்கி,சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதன் ஊடாக இந்த மன்னார் மாவட்டத்தின் வருமானத்தை உயர்த்துவதற்கும், கைத்தொழிலிலே ஈடுபடுகிறவருடைய வருமானத்தை அதிகரிப்பதற்கும்,தொடர்ச்சியான செயற்பாடுகளை எங்களுடைய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
எங்களுடைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது எந்தவித நிதி மோசடிகளும் ஏற்படாத வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவித்தார்.







