‘உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’ என்று கூறுகிறோம்.
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல் இரண்டாவது பயனாகும். நாம் பெருநாள் கொண்டாடுவதே அவர்கள் கூறிய வழிமுறைப்படி தான். எனவே அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் முஹம்மது இறைவனின் தூதர் என்னும் கலிமாவின் பொருளை உண்மைப்படுத்துகிறோம்.
மூன்றாவது பயன் நோன்புப் பெருநாள் தர்மம் வழங்குவது, அதனால் ஏழைகளும் அன்று மகிழ்வாகப் பெருநாள் கொண்டாட வழியேற்படுகிறது. சமுதாய ஒற்றுமை, மக்கள் நலனில் அக்கறை போன்ற பயன்களும் இதனால் ஏற்படுகின்றன. ஏழை, செல்வந்தன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என அனைவரும் ஓரிடத்தில சமமாக ஒன்று கூடுவதாலும் ஒருவரையொருவர் ஸலாம் கூறி வாழ்த்துவதாலும் அன்பும் சகோதரத்துவமும் பரிணமிக்கின்றன.
இறைத் தூதர் (ஸல்) கூறினார்கள். ‘என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாதவரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாய் ஆக முடியாது. ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாம் கூறுவதைப் பரவலாக்குங்கள்’.
பெருநாளின் போது சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தப்படும். அதன் மூலம் பெற்றோர்களைப் பேணுதல், உறவினருடன் சேர்ந்து வாழுதல், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருத்தல், அண்டை வீட்டாரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை, பெண்களுக்குத் தேவையான கணவன் – மனைவி உரிமைகளும் கடமைகளும் இறைவனுக்கு இணை வைத்தலின் தீங்குகள், மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும் அநாச்சாரங்கள், அவற்றின் தீங்குகள், மார்க்கம் தடை செய்துள்ள மது, விபச்சாரம், கொலை, திருட்டு, வட்டி, லஞ்சம், புறம்பேசுதல், கோள் சொல்லுதல், அவதூறு கூறுதல் போன்ற பல விஷயங்களின் தீங்குகள், அவற்றுக்குக் கிடைக்கும் இவ்வுலக மறுவுலகத் தண்டனைகள் குறித்து சொல்லப்படுவதால் மக்களுக்கு அவர்களது மார்க்கம் பற்றிய தெளிவு கிடைக்கிறது. இன்னும் இது போன்ற இறை நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் காரியங்களும் இறை நம்பிக்கைக்கு வலுவூட்டும் பல பயன்களும் உள்ளன.







