வைத்தியர்களின் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்

98
0
Spread the love

அரசாங்கத்தினால் முறையான இடமாற்ற நடைமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் குறித்து இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதியளவில் சுமார் 6,000 வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த முறையான இடமாற்றச் செயல்பாட்டின் மூலம், குறிப்பிட்ட சங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட பல வைத்தியர்களுக்கு நீதி கிடைத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“மே 10 ஆம் திகதியாகும் போது சுமார் 6,000 வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இது பெப்ரவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 13 வருடங்களாக இவ்வாறான முறையான நடைமுறை ஒன்று இடம்பெறவில்லை. இடமாற்றச் சபைகளில் இருந்ததாகக் கூறிக்கொண்டு, அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சில இடங்களில் 13 முதல் 17 வருடங்கள் வரை தங்கியிருந்தனர். கண் வைத்தியசாலையில் இருந்தவர்கள் தமக்குரிய தேசிய வைத்தியசாலைக்குச் செல்ல முடியாமல் வீதியைக் கடக்கக் கூடத் தயங்கினர். இவ்வாறான அனைத்து முறைகேடுகளையும் நிறுத்தி, வருடாந்த இடமாற்ற நடைமுறையை நாம் முன்னெடுத்து வருகிறோம். இதனால் நீண்டகாலமாக அநீதிக்குள்ளாகியிருந்த பெரும்பான்மையான வைத்தியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றுச் சபை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிகளை தமக்கு விருப்பமான இடங்களில் பல வருடங்களாகத் தங்க வைத்திருந்தவர்களே இதனை எதிர்க்கின்றனர். எனவே, இந்த இடமாற்ற நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

2018ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விசேட பட்டியல் ஒன்று இருந்தது. யுத்த காலத்திலும் அதன் பின்னரும் அந்தப் பகுதிகளுக்கு வைத்தியர்களை அனுப்புவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. யுத்தம் முடிந்து 8-9 வருடங்கள் ஆகியும் அதனை நிறுத்த யாரும் முயற்சிக்கவில்லை. 2020இல் இது ‘கஷ்டப் பிரதேசப் பட்டியல்’ என மாற்றப்பட்டது. சுகாதார அமைச்சு இதற்காக 7 பிரதான அளவுகோல்களைக் கொண்டிருந்தது. ஆனால், இந்தச் சங்கத்தின் அழுத்தத்தினால் அந்தப் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருந்தன.

இம்முறை சுகாதார அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண சுகாதாரப் பணிப்பாளர்களை இணைத்து பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அந்த 7 அளவுகோல்களின் அடிப்படையில் புதிய கஷ்டப் பிரதேசப் பட்டியலைத் தயாரித்துள்ளோம். இந்தப் பட்டியலைத் தயாரிக்க சுகாதார அமைச்சுக்கு தொழிற்சங்கங்கள் தேவையில்லை. அது தொழிற்சங்கங்களின் வேலை அல்ல, சுகாதார அமைச்சின் பொறுப்பாகும். அதன்படி 265 இடங்களைக் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு சங்கங்களை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here