இலங்கையில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
அத்துடன் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது பொதுமக்கள், அடியார்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போரில் உயிரிழந்த மக்களுக்கு தீபமேற்றி ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, யாழ் பல்கலைக்கழக வளாகத்திலும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று பிரதேச கிளையின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும், கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கதிரவெளியில் நடைபெற்றது.
அத்துடன் தமிழ்நாட்டின் சென்னையிலும் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் உயிரிழந்த மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும்.







