தமிழ் தேசியம் என்ற போர்வையிலே மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்- ரில்வின் சில்வா

56
0
Spread the love

இன,மத,மொழி பேதங்களுக்கு அப்பால், அனைத்து மக்களுக்கும் சமத்துவமான உரிமைகளையும், நீதியையும் பெற்றுக்கொடுப்பதில் உறுதியாக இருக்கின்ற தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (23.05) சனிக்கிழமை,தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில், தமிழ் தேசிய அரசியல் என்ற போர்வையிலே, மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து
தங்களது சுயநல அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட தமிழ் தலைமைகளை நாங்கள் தொடர்ச்சியாகப் பார்த்து வருகின்றோம்

அவர்கள் வடபகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கோ உண்மையான வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கோ, இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளுக்கோ எந்தவொரு நிலையான தீர்வையும் பெற்றுத்தரவில்லை.

இன்று,இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் கலாசாரமும் மாற்றமடைந்து வருகிறது.
தென்னிலங்கை மக்கள் ஊழலற்ற நேர்மையான மக்கள் நலனை முதன்மையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் பயணத்தில் தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து இருக்கிறார்கள்.

அதே மாற்றத்தை, அதே புதிய அரசியல் யுகத்தை யாழ்ப்பாண மண்ணிலும் உருவாக்க வேண்டிய பொறுப்பு இங்குள்ள மக்களுக்கும் இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி, இன,மத, மொழி பேதங்களுக்கு அப்பால், அனைத்து மக்களுக்கும் சமத்துவமான உரிமைகளையும், நீதியையும் பெற்றுக்கொடுப்பதில் உறுதியாக இருக்கின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாயம், மீன்பிடி, மற்றும் கல்வித்துறை சார்ந்த உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான தெளிவான பொருளாதாரத் திட்டங்களை எமது கட்சி நாடாளுமன்றத்தில் முன் வைத்து வருகிறது.

எனவே, இனியும் ஏமாற்று
அரசியல்வாதிகளின் வெற்று முழக்கங்களை நம்பி ஏமாறாமல், உங்கள் எதிர்கால சந்ததியின் வாழ்வு சிறக்க, ஊழலற்ற, தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் தேசிய மக்கள் சக்திக்கு இங்குள்ள மக்களும் பெரும் ஆதரவை தொடர்ச்சியாக வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here