வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னெடுப்பிலும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடனும், மன்னார் மாவட்டத்தில் முதன்முறையாக ‘சிசு செரிய’ பாடசாலை பேருந்துச் சேவை எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைகாலை 7.20 மணிக்கு மன்னார் பேருந்து நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
மாணவர்கள் பாதுகாப்பாகவும் நேரத்திற்கும் ஏற்ற வகையிலும் பாடசாலைகளுக்குச் சென்று திரும்புவதை உறுதிப்படுத்தும் நோக்கில்,வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முயற்சியின் பலனாக இத்திட்டம் மன்னாரில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இச்சேவையின் ஆரம்ப நிகழ்வில் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தத் திட்டம் மூலம் மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பான, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் நம்பகமான பாடசாலைப் போக்குவரத்து வசதி கிடைப்பதுடன்,பெற்றோரின் போக்குவரத்துச் சுமையையும் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.






