மீனவர்களுடைய வாழ்வாதாரத்தினைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான சிறந்த இரண்டு புதிய திட்டங்களை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
அந்த வகையில், மீனவர்களுக்கு
ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஓய்வூதியத் திட்டங்களில் இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து
சலுகைகளைக் கூட்டி புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதோடு மீனவர்களுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளது .
இந்த காப்புறுதித் திட்டங்களை அரச அங்கீகாரம் பெற்ற கமத்தொழில், கமநல காப்புறுதிச் சபை மற்றும் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் அரசாங்கம் கையளித்துள்ளது.
அந்த வகையில், மன்னாரில் இன்று கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையினால் காப்புறுதி செய்யப்பட்ட மீனவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்,
டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதற்கட்டமாக மீன்பிடி வலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மன்னார் கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தலைமையில்,
மன்னார் கடற் தொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்தில் இன்று (26.05) செவ்வாய்க்கிழமை
நடைபெற்ற இந் நிகழ்வில் ,
விருந்தினர்களாக, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர்
எச்.ஹலீம்தீன் , பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் வோல்டி சொய்சா , கமத் தொழில், கமநல காப்புறுதிச் சபையின்
மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் செ. திலிப்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு
வலைகள் மற்றும் காப்புறுதிச் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.







