மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட விளையாட்டு விழா – 2026 நிகழ்வு இன்று (07.06)ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மன்னார் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விளையாட்டு விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இவ்விளையாட்டு விழாவில் நேற்றிலிருந்து (06) தடகள மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் இறுதி நாளான இன்றைய தினமும் ஓட்டப் போட்டி உதைப்பந்தாட்டம் போன்ற பல்வேறு
விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டன.
இவ்விளையாட்டுப் போட்டிகளில் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவிலும் உள்ள பாடசாலைகளை மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நடைபெற்று முடிந்த பெருவிளையாட்டுகள் மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில், முதலாம் இடத்தினை மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவு அணியும், இரண்டாம் இடத்தினை நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு அணியும், மூன்றாம் இடத்தினை
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு அணியும் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள்,பதக்கங்கள் பணப்பரிசில்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
மேலும் விளையாட்டு துறையில் பல வருடங்களாக பணியாற்றி வரும் மூன்று விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரசாங்க அதிபரினால் பொன்னாடைகள் போர்த்து கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிப்பதோடு, மாணவர்கள் மத்தியில் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில்
வட மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் பி. முகுந்தன் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக, பிரதேச செயலாளர்கள், பிரதி கல்விப் பணிப்பாளர்,உதவிக் கல்வி பணிப்பாளர், மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள்,மன்னார் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







