EPF, ETF தொடர்பில் முக்கிய தகவல்களை வௌியிட்ட பிரதியமைச்சர்

61
0
Spread the love

EPF மற்றும் ETF நிதியங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் கடந்த பல தசாப்த காலப்பகுதியில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத அளவிலான முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், நிதியங்களின் திறனை மேம்படுத்துவதற்கும் உறுப்பினர்களின் பலன்களை அதிகரிப்பதற்கும் தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக பல புதிய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய தரவுப் பதிவுகளின்படி, ஊழியர் சேமலாப நிதியத்தில் (EPF) பதிவாகியுள்ள மற்றும் பலன்களைப் பெறும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 22.9 மில்லியனாகும், அவர்களுள் மாதாந்தம் உறுப்பினர் சந்தா பணம் வைப்பு செய்யப்படும் செயலில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை 3.1 மில்லியனாகும்.

அத்துடன், ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்தில் (ETF) பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று மில்லியனாகும்.

2025ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் சொத்து மதிப்பு 4.9 டிரில்லியன் ரூபாவாகவும், ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்தின் சொத்து மதிப்பு 637.5 பில்லியன் ரூபாவாகவும் காணப்படுவதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டிற்கான செயலில் உள்ள முதலாளிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஓராயிரம் எனவும், அதில் அரை அரச துறை சார்ந்த முதலாளிமார்களின் எண்ணிக்கை 376 எனவும் குறிப்பிட்டார்.

பணம் செலுத்தத் தவறிய தனியார் மற்றும் அரை அரச துறை நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை அறவிட்டுக்கொள்ளும் செயற்பாட்டைத் தொழிலாளர் திணைக்களம் தற்போது விரைவுபடுத்தியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

தொழிலாளர் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் தரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து, புதிய தரவு அமைப்பின் கீழ் பணியாற்றுவதற்காக புதிய மென்பொருள் (Software) ஒன்று தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் இங்கு கூறினார்.

அத்துடன், ஊழியர் பதிவு உள்ளிட்ட பல EPF சேவைகளை இணையவழி (Online) ஊடாக மேற்கொள்வதற்காக “டிஜிட்டல் EPF” வசதி கடந்த டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மறுசீரமைப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களின் ஊடாக, ஒரே சேவைச் சாளரத்தின் (Single Window) மூலம் EPF மற்றும் ETF ஆகிய இரு நிதியங்களுக்கும் உரிய அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here