கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொள்ளவுள்ள மாபெரும் இசைக் கொண்டாட்டம் இன்று ( 21.06.2025) மாலை 6.30 க்கு நடைபெறவுள்ளது.
இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரனின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் “வன்னியின் இசைத் தென்றல்”
இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஈழத்தின் புகழ்பெற்ற சாந்தன் இசைக் குழுவின் இசையமைப்பில், தென்னிந்திய பிரபல பாடகர்களான சத்தியன், திவாகர், பத்மலதா ஆகியோர் பாடல்களைப் பாடவுள்ளனர்.
அவர்களுடன் ஈழத்தின் புகழ்பெற்ற பாடகர் கோகுலன் உள்ளிட்டவர்களும் பாடல்களைப் பாடி இரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களை உற்சாகப்படுத்தி, இசையின் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நோக்கில் இந்த இசை நிகழ்ச்சி இலவசமாக நடத்தப்படுவதாகவும், இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கவுள்ளதாகவும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் பிரபாலினி பிரபாகரன் தெரிவித்தார்.
இசை நிகழ்ச்சி தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.







