மன்னார் நானாட்டான் பிரதான வீதி நறுவிலிக்குளம் பகுதியில் இன்று(10.07)மாலை இடம் பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம் அடைந்திருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
இன்று மாலை நறுவிலிக்குளத்தில் இருந்து தாய்,தந்தை,இரண்டு பிள்ளைகள் என நான்கு பேர் நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, நானாட்டான் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இதன்போது படுகாயம் அடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மேலும், படுகாயங்களுக்குள்ளான தாய்,தந்தை, மற்றும் 12 வயது மகள் மன்னார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த பட்டா ரக வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியைக் கைது செய்த முருங்கன் பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









