தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச நீதிப் பொறிமுறைகள் ஊடாகவே நீதி வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் இன்றைய தினம் (26.07) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, யாழ்ப்பாணம் செம்மணி புதை குழிக்கு அண்மித்த பகுதியான, நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியில் இந்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
பதாகைகளை ஏந்தியவாறும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







