முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் பல கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்றைய தினம் புதன்கிழமை (03.09) காலை மீட்கப்பட்டு முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முருங்கன் பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் இணைந்து மன்னார்-நானாட்டான் பிரதான வீதி,நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இன்று (03.09) காலை விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது 25 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட 398 சிறிய பொதிகளைக் கொண்ட கேரள கஞ்சா பொதிகள் கண்டெடுக்கப்பட்டன.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா 906 கிலோ கிராம் நிறையுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மன்னார் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜய சேகர முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு இன்று (03.09) காலை விஜயம் செய்து மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை பார்வையிட்டதோடு,பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் கலந்துரையாடியுள்ளார்.








