வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை

143
0
Spread the love

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் தேர்தல்களில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கும் வகையில் சட்டங்களை திருத்தவும் புதிய சட்டங்களை உருவாக்கவும் தேவையான விபரங்களை ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின்படி, வாக்களிக்கும் உரிமை தற்போது இலங்கையில் வசிக்கும் மற்றும் தேர்தல் சட்டத்தின்படி வாக்காளர் பதிவில் பெயர் பதிவு செய்துள்ள பிரஜைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய தேர்தல் சட்டத்தில், வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்களிக்கும் எந்த விதமான ஏற்பாடுகளும் இல்லை. அதற்கான சட்டமும் இதுவரை இயற்றப்படவில்லை.

இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் போன்ற பல ஆசிய நாடுகள் வெளிநாடுகளில் உள்ள தங்கள் பிரஜைகளுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டத் திட்டங்களை ஏற்கனவே உருவாக்கியுள்ளன.

அதேபோன்று இலங்கையிலும் இத்தகைய சட்டங்களை மாற்றுவது காலத்தின் தேவையாக கருதப்படுகிறது. இதற்கமைய, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு, வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் உள்ளிட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட உள்ளது.

இந்த குழு, தேவையான சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய சட்ட வடிவமைப்புகளுக்கான பரிந்துரைகளை முன்வைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here