சீதையம்மன் ஆலயத்தில் இந்திய அமைச்சர் வழிபாடு

166
0
Spread the love

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் இந்தியாவின் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயண பிரசாத் உள்ளிட்ட குழுவினர் நேற்று (31.01) சனிக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த ஆலயத்திற்கு வருகை தந்த குழுவினரை, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசிலையும் வழங்கிக் கௌரவித்தார்.

இந்த விஜயம் தொடர்பாகப் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயண பிரசாத் கருத்துத் தெரிவிக்கையில்:

“இராமாயண யாத்திரை என்பது இராமபிரான் அவதரித்த அயோத்தியையும், சீதையன்னை பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சீதாமர்ஹியையும் இணைப்பதாகும். அன்னை ஜானகி பிறந்த இடத்தில் பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தியில் தசரத சக்கரவர்த்தியின் புதல்வர்களான இராமனும் லட்சுமணனும் வனவாசம் சென்ற போது, இராவணனால் அன்னை சீதை கடத்திச் செல்லப்பட்டு இலங்கையில் உள்ள அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டார்.”

இது தொடர்பாகச் சனாதன கங்கா மன்றத்தின் தலைவர் பிரவீன் குமார் கருத்துத் தெரிவிக்கையில்:

“இந்த வரலாற்றுப் பாதையைச் சுற்றுலாத் தலமாக விஸ்தரிக்க வேண்டும். இந்த வரலாற்றுப் பாதையின் ஊடாக இந்தியா மற்றும் இலங்கைக்கான உறவை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் என்பதே எனது நோக்கமாகும்.

அன்னை சீதை மற்றும் இராமபிரானின் பாதச்சுவடுகளைத் தேடி நாம் இங்கு வந்தோம். நாம் கங்கைக்குப் பணியாற்றி வருகிறோம். கங்கை எமக்குப் புனிதமான நீர் மற்றும் புனிதமான நதி. அனைத்துத் தெய்வங்களும் கங்கையுடன் தொடர்புடையவர்கள். எங்கெல்லாம் கங்கை இருக்கிறதோ அங்கெல்லாம் கடவுள் இருக்கிறார்.

திரேதா யுகத்திற்குப் பின்னர் முதன்முறையாக இந்த வருடம் புனித பாதுகைகளை கொண்டுவர இருக்கின்றோம். அது இரண்டு மாதங்களுக்கு இங்கு வைக்கப்படும். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவித்திருக்கின்றோம். இலங்கையில் இராமாயண சுற்றுலாவை மேம்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here