கண்டி-கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

147
0
Spread the love
பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

2021 ஆம் ஆண்டு ஹங்கேரிய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 14.37 பில்லியன் ரூபா ஆகும். அண்மைய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, ஹங்கேரிய அரசாங்கத்தின் கடன் உதவி இடைநிறுத்தப்பட்டதுடன், மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டன.

அதன்படி, 12.27 பில்லியன் ரூபா உள்நாட்டு நிதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை, 22 மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் வில்லியம் கோபல்லாவ மாவத்தை வழியாக நிர்மாணிக்கப்படுவதோடு, கன்னொருவ வீதியில் மகாவலி ஆற்றின் வலது கரையில் இருந்து தொடங்கி, கெட்டம்பே சந்தி மற்றும் புகையிரதப் பாதைக்கு மேலால் நிர்மாணிக்கப்படும். இந்த மேம்பாலம் 374 மீட்டர் நீளம் கொண்டதுடன், புகையிரதப் பாதை வரை இருவழிப் பாதைகளாக நிர்மாணிக்கப்படும்.

பேராதனை வீதி ஊடாக நிர்மாணிக்கப்படும் கிளை மேம்பாலம், புகையிரதப் பாதைக்கு மேலால் உள்ள பிரதான மேம்பாலத்துடன் இணைக்கப்பட்டு, மூன்று வழிப் பாதையாக பிரதான மேம்பாலம், வில்லியம் கோபல்லாவ வீதியுடன் இணையும் வகையில் நிர்மாணிக்கப்படும்.

இந்த கிளை மேம்பாலத்தின் நீளம் 172 மீட்டர் மற்றும் அகலம் 6.5 மீட்டர் ஆகும். இந்த கிளை மேம்பாலம் நிர்மாணிக்கப்படுவதால், கண்டியிலிருந்து வில்லியம் கோபல்லாவ வீதியில் பேராதனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் புகையிரதக் கடவையில் எதிர் கொள்ளாமல் பயணிக்க முடியும்.

பிரதான மேம்பாலத்தின் இருவழிப் பாதைப் பகுதியின் அகலம் 9.4 மீட்டர் ஆகும், மேலும் 03 வழிப்பாதைப் பகுதியின் அகலம் 12.9 மீட்டர்.

திட்டத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, திட்ட அதிகாரிகளுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here