மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை

51
0
Spread the love

மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள், தொடர்ச்சியாக பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகப் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அடையாளப்படுத்தப்பட்ட சில உணவகங்கள் மீது சுகாதாரத் துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம், மன்னார் நகரசபை சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது இயங்கி வந்த 3 உணவகங்கள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி, வைத்தியசாலைப் பகுதியை அண்டியுள்ள இரண்டு உணவகங்கள் மீதும், மன்னார் உப்புக்குளம் மற்றும் பள்ளிமுனை வீதிப் பகுதிகளில் அமைந்துள்ள இரு உணவகங்கள் மீதும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமை, கழிவகற்றல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படாமை, அதிக அளவு இலையான்கள் காணப்பட்டமை, கையுறை பயன்படுத்தாமை, சுகாதாரமற்ற முறையில் உணவுகளைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here