எரிவாயு நெருக்கடியின் பின்னணி என்ன – ஜனாதிபதி விளக்கம்

134
0
Spread the love

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (03.03) பாராளுமன்றத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டிற்கான தீர்வுகளை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, எரிவாயுவைச் சேமித்து வைப்பதில் நெருக்கடி காணப்படுவதால் அதற்கான தேவையான தீர்வுகள்
தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

நாட்டில் அதிகபட்சமாக ஒரு வார காலத்திற்கு மாத்திரமே எரிவாயுவைச் சேமித்து வைக்க முடியும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் எரிவாயு மற்றும் எரிபொருளில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனத் தெரிவித்த ஜனாதிபதி,
மார்ச் 12ஆம் திகதியளவில் ஒரு இலட்சம் புதிய எரிவாயு சிலிண்டர்களுடன் கப்பல் ஒன்று நாட்டிற்கு வரவுள்ளதாகவும் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நாம் எதிர்கொள்ளும் ஒரு விசேட பிரச்சினை எரிவாயு பிரச்சினை. எமது முழுமையான சேமிப்புத் திறன் 8,000 மெட்ரிக் தொன்களாகும்.
லிட்ரோ நிறுவனத்தின் எமது தினசரி எரிவாயு தேவை 1,000 முதல் 1,200 மெட்ரிக் தொன்களுக்கு இடைப்பட்டதாகும்.

எம்மால் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மாத்திரமே எரிவாயுவைச் சேமிக்க முடியும். எனவே,
கையிருப்பு முடியும் வரை காத்திருந்து எரிவாயுவைக் கொண்டுவர முடியாது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 8,000 மெட்ரிக் தொன் வீதம்
துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. இதுதான் நிலைமை. இதனை மாற்ற வேண்டும். தற்போதும் மாலைதீவில் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலில் இருந்து சிறிய கப்பல்கள் மூலம் 8,000 மெட்ரிக் தொன் வீதம் கொண்டு வரப்படுகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
லிட்ரோ எரிவாயு ஒரு இலட்சம் புதிய சிலிண்டர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. மார்ச் 12ஆம் திகதி அந்த கப்பல் வருகிறது. ஏனெனில் சிலிண்டர் தட்டுப்பாடும் நிலவியது. மஞ்சள் நிற சிலிண்டர் வைத்திருப்பவர்கள் நீல நிறத்திற்கு மாற விரும்பினர். ஆனால் போதிய சிலிண்டர்கள் இல்லை. இப்படியேதான் இதனைச் சரிசெய்கிறோம். எரிவாயு தட்டுப்பாடு என்று கூச்சலிட்டார்கள், முதலில் இந்த நெருக்கடியைப் புரிந்துகொள்ளுங்கள்…

8,000 மெட்ரிக் தொன் சேமிப்புத் திறன் இருந்து, லிட்ரோவால் 1,000 – 1,200 வரை வழங்க முடியுமான நிலையில்,
திடீரென தேவை 1,800 ஆக அதிகரித்தால், எஞ்சியுள்ள கையிருப்பை 5 நாட்களுக்கும் குறைவாகவே வழங்க முடியும். அப்போது ஒரு நெருக்கடி ஏற்படலாம். அந்த நெருக்கடிக்குத் தீர்வுகளைக் காண முடியும்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here